Tuesday, 26 January 2021

நூலகம்

 

நூலகம் 


குறிப்புச் சட்டகம்

1.முன்னுரை
2.நூலகத் தோற்றம்
3.நூலகத்தின் வகைகள்
4.நூலகங்கள்
5.அண்ணா நூற்றாண்டு நூலகம்
6.பள்ளி நூலகம்
7.நூலகத்தின் இன்றைய நிலை
8.முடிவுரை 

முன்னுரை
          மனிதனைப் பண்படுத்துவது புத்தகங்கள். இந்தப் புத்தகங்கள் ஒருசேர இருக்கும் அறிவுத் திருக்கோயில்தான் நூலகம். ‘நூல் பல கல்’ என்பது ஆன்றோர் மொழி. நூல் பல கற்க உதவும் நூலகம் பற்றிக் காண்போம். 

நூலகத் தோற்றம்
          அரண்மனை, மாளிகை, மாடம், கோவில் ஆகிய இடங்களே நூலகத்தின் தோற்றங்களாகும். கி.மு.நான்காம் நூற்றாண்டிலேயே நூலகங்கள் இருந்ததாக வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. பழங்காலத்தில் களிமண் ஏடுகள், ஓலைச்சுவடிகள் பயன்படுத்தப்பட்டன. காகிதமும் அச்சுப்பொறியும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இலக்கியம், வரலாறு, அறிவியல், கணிதம் எனப் பலவகை நூல்கள் உலக மொழிகளில் வெளிவரத் தொடங்கின.

நூலகத்தின் வகைகள்
          நகரங்களிலும், கிராமங்களிலும் அரசு நடத்தும் நூலகங்கள் உள்ளன. தனியார் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தும் நூலகங்களும் உள்ளன. தமிழக அரசின் நூலக ஆணைக்குழு, பகுதிநேர, ஊர்ப்புற, நகர்ப்புற, மாவட்ட மைய நூலகங்களை நடத்தி வருகிறது.

நூலகங்கள்
          சென்னையில் பாவேந்தர் செம்மொழித் தமிழ் ஆய்வு நூலகம், கன்னிமாரா நூலகம், உ.வே.சா நூலகம்; சென்னைப்பல்கலைக்கழக நூலகம், மறைமலை அடிகளார் நூலகம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம் முதலிய நூலகங்கள் உள்ளன.  தஞ்சையில் சரஸ்வதி மஹால் நூலகமும், சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகமும், மதுரையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகமும் உள்ளன.

அண்ணா நூற்றாண்டு நூலகம்
           2010 – ஆம் ஆண்டில் 8 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளி நூலகம்
           மாணவர்களின் வயதிற்கும் மனநிலைக்கும் ஏற்ப ‘புத்தகப் பூங்கொத்து’ என்னும் வகுப்பறை நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

நூலகத்தின் இன்றைய நிலை
           இன்று இணைய தள நூலகம், குறுவட்டுகள், மின்னணு ஒளிவட்டு, நுண்சுருள் என வேறு சில வடிவங்களில் நூல்கள் உருமாற்றம் பெற்று நூலகப் பயன்பாட்டில் உள்ளன.

முடிவுரை
          “நான் மூன்று எம்.ஏ.படித்ததால் பேரறிஞர் பட்டம் பெறவில்லை, ‘கன்னிமாரா நூலகத்தில் படித்ததால் பேரறிஞர் பட்டம் பெற்றேன்’ என்று அண்ணா கூறியுள்ளார். நூலகத்தின் சிறப்புக்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டுத் தேவையில்லை. நாமும் அண்ணாவின் வழியில் சென்று பேரறிஞர் பட்டம் பெறுவோம்.

No comments:

Post a Comment