Tuesday, 26 January 2021

சிக்கனமும் சிறுசேமிப்பும்

 

சிக்கனமும் சிறுசேமிப்பும்

 குறிப்புச் சட்டகம்
1. முன்னுரை
2. சிக்கனமும் சிறுசேமிப்பு
3. சேமிப்பு பற்றிய பழமொழிகள்
4. சேமிக்கும் வழிகள்
5. சேமிப்பின் பயன்கள்
6. வீடும் நலம் பெறும், நாடும் நலம் பெறும்
7. முடிவுரை

முன்னுரை:
‘ஈட்டுக பொருளை’ என்றார் வள்ளுவர். ஈட்டிய அத்தகைய பொருளை எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சிக்கனமும் சிறுசேமிப்பும்:
நம் வாழ்வில் ஈட்டும் பொருளைத் தேவைக்கேற்பச் செலவு செய்து வாழ வேண்டும். அளவுக்கு அதிகமாகச் செலவுசெய்தால், நீராவிபோல பணம் நம்மை விட்டு நீங்கிவிடும். சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் நீருற்றைப் போல பணம் பெருகிக் கொண்டு இருக்கும்.

சேமிப்பு பற்றிய பழமொழிகள்:
“சிறுகக் கட்டிப்பெருக வாழ்”
“பணம் பத்தும் செய்யும்”
“பணமில்லாதவன் பிணம்”
“சிறுதுளி பெருவெள்ளம்” போன்ற பழமொழிகள் சேமிப்பின் அவசியத்தை உணர்த்துகின்றன.

சேமிக்கும் வழிகள்:
மாணவர்கள்   சேமிக்கப்  பள்ளிகளில்  “சஞ்சாயிகாத் திட்டம்”
செயல்பட்டு வருகிறது. மேலும் அஞ்சலகம், வங்கி, ஆயுள் காப்பிட்டுக்கழகம் போன்ற நிறுவனங்கள் மக்கள் தங்கள் பணத்தைச் சேமிக்க உதவுகின்றன.

சேமிப்பின் பயன்கள்:
“இளமையில் சேகரி, முதுமையில் செலவிடு” என்பது முதுமொழி. இளமையில் கடுமையாக உழைத்து ஈட்டும் பொருளைச் செலவு செய்துவிடாமல், அப்பொருளின் ஒரு பகுதியைச் சேமிக்க வேண்டும். அப்போதுதான் முதுமைக் காலத்திலும், எதிர்பாராத செலவுகள் நேரும் காலத்திலும் சேமிப்பு நமக்கு உதவும். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதால் சேமிப்பானது இன்றியமையாத ஒன்றாகும்.

வீடும் நலம் பெறும்; நாடும் நலம் பெறும்:
“சேமிக்க வேண்டும் - காசு
 சேமிக்க வேண்டும்
 சிக்கனமாய்ச் செலவு செய்து
 காண்பிக்க வேண்டும்”
சேமிக்காதவன் கடன்பட்டு வேதனை அடைவான். தேனீ போலவும், எறும்புபோலவும் அயராது உழைத்துச் சேமித்தால் வீடும் நலம் பெறும், நாடும் நலம் பெறும்.

முடிவுரை:
சிறுகச்சேமித்துச் சிக்கனமாய் வாழ்ந்தால் பாறாங்கல் மீது வீழ்ந்த மழைநீர் போல, நமது துன்பங்களெல்லாம் சிதறிப்போகும். ஆகவே சிக்கனமாய்ச் செலவு செய்து, செழிப்போடு வாழ்வோம்.
சேமிப்போம்!
நாமும் முன்னேறுவோம்!!
நம் நாட்டை முன்னேற்றுவோம்!!!

No comments:

Post a Comment