Tuesday, 26 January 2021

நூலகம்

 

நூலகம் 


குறிப்புச் சட்டகம்

1.முன்னுரை
2.நூலகத் தோற்றம்
3.நூலகத்தின் வகைகள்
4.நூலகங்கள்
5.அண்ணா நூற்றாண்டு நூலகம்
6.பள்ளி நூலகம்
7.நூலகத்தின் இன்றைய நிலை
8.முடிவுரை 

முன்னுரை
          மனிதனைப் பண்படுத்துவது புத்தகங்கள். இந்தப் புத்தகங்கள் ஒருசேர இருக்கும் அறிவுத் திருக்கோயில்தான் நூலகம். ‘நூல் பல கல்’ என்பது ஆன்றோர் மொழி. நூல் பல கற்க உதவும் நூலகம் பற்றிக் காண்போம். 

நூலகத் தோற்றம்
          அரண்மனை, மாளிகை, மாடம், கோவில் ஆகிய இடங்களே நூலகத்தின் தோற்றங்களாகும். கி.மு.நான்காம் நூற்றாண்டிலேயே நூலகங்கள் இருந்ததாக வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. பழங்காலத்தில் களிமண் ஏடுகள், ஓலைச்சுவடிகள் பயன்படுத்தப்பட்டன. காகிதமும் அச்சுப்பொறியும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இலக்கியம், வரலாறு, அறிவியல், கணிதம் எனப் பலவகை நூல்கள் உலக மொழிகளில் வெளிவரத் தொடங்கின.

நூலகத்தின் வகைகள்
          நகரங்களிலும், கிராமங்களிலும் அரசு நடத்தும் நூலகங்கள் உள்ளன. தனியார் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தும் நூலகங்களும் உள்ளன. தமிழக அரசின் நூலக ஆணைக்குழு, பகுதிநேர, ஊர்ப்புற, நகர்ப்புற, மாவட்ட மைய நூலகங்களை நடத்தி வருகிறது.

நூலகங்கள்
          சென்னையில் பாவேந்தர் செம்மொழித் தமிழ் ஆய்வு நூலகம், கன்னிமாரா நூலகம், உ.வே.சா நூலகம்; சென்னைப்பல்கலைக்கழக நூலகம், மறைமலை அடிகளார் நூலகம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகம் முதலிய நூலகங்கள் உள்ளன.  தஞ்சையில் சரஸ்வதி மஹால் நூலகமும், சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகமும், மதுரையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகமும் உள்ளன.

அண்ணா நூற்றாண்டு நூலகம்
           2010 – ஆம் ஆண்டில் 8 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளி நூலகம்
           மாணவர்களின் வயதிற்கும் மனநிலைக்கும் ஏற்ப ‘புத்தகப் பூங்கொத்து’ என்னும் வகுப்பறை நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

நூலகத்தின் இன்றைய நிலை
           இன்று இணைய தள நூலகம், குறுவட்டுகள், மின்னணு ஒளிவட்டு, நுண்சுருள் என வேறு சில வடிவங்களில் நூல்கள் உருமாற்றம் பெற்று நூலகப் பயன்பாட்டில் உள்ளன.

முடிவுரை
          “நான் மூன்று எம்.ஏ.படித்ததால் பேரறிஞர் பட்டம் பெறவில்லை, ‘கன்னிமாரா நூலகத்தில் படித்ததால் பேரறிஞர் பட்டம் பெற்றேன்’ என்று அண்ணா கூறியுள்ளார். நூலகத்தின் சிறப்புக்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டுத் தேவையில்லை. நாமும் அண்ணாவின் வழியில் சென்று பேரறிஞர் பட்டம் பெறுவோம்.

தேசிய ஒருமைப்பாடு

 தேசிய ஒருமைப்பாடு 

குறிப்புச் சட்டகம்

1.முன்னுரை
2.வேற்றுமையில் ஒற்றுமை
3.நாட்டுப் பாதுகாப்பில் தேசிய ஒருமைப்பாடு 
4.விடுதலையின் அடித்தளம் தேசிய ஒருமைப்பாடே
5.ஒற்றுமையின்மையால் தீவிரவாதம்
6.பாரதிதாசன் கூறும் உலக ஒருமைப்பாடு
7.முடிவுரை 

முன்னுரை
      மக்கள் அனைவரிடமும் அமைதி, சகிப்புத்தன்மை, மனித நேயம், மத, இன நல்லிணக்கம் ஆகியவை இருந்தால்தான் தேசிய ஒருமைப்பாடு நிலைத்திருக்கும். தேசிய ஒருமைப்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் காண்போம்.

வேற்றுமையில் ஒற்றுமை
      இந்தியா பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள், பல சாதிகள் என்று வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வில் ஒன்று பட்டிருக்கிறது. அனைவரையும் இணைக்கின்ற மனிதச் சங்கிலியாக தேசிய ஒருமைப்பாடு திகழ்கிறது. இதைத்தான் பாரதி,
       “முப்பது கோடி முகமுடை யாள்உயிர் 
மொய்ம்புற ஒன்றுடையாள்”  - என்று பாடினார்.

நாட்டுப் பாதுகாப்பில் தேசிய ஒருமைப்பாடு
    “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
    ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே”
என்பது பாரதி வாக்கு. சீனா படையெடுத்து வந்தபோதும், பாக்கிஸ்தான் படையெடுத்து வந்தபோதும் நாம் ஒன்றுபட்டு வெற்றிபெற்று பாரதியின் வாக்கையும் நம் தேசிய ஒருமைப்பாட்டையும் உலகிற்கு உணர்த்தி உள்ளோம்.

விடுதலையின் அடித்தளம் தேசிய ஒருமைப்பாடே
இன்று நாம் அனுபவிக்கும் சுதந்தரம் எளிதாகக் கிடைத்ததில்லை. ஒருமைப்பாட்டு உணர்வு என்னும் உரமிட்டு, கண்ணீரும் செந்நீரும் சிந்தி, எண்ணற்றோர் இன்னுயிர்த் தியாகம் செய்து சொல்ல முடியாத துன்பங்களுக்கு உள்ளாக்கிப் பெற்றதாகும். இவ்வாறு பெற்ற விடுதலைக்கு அடித்தளமாக அமைந்தது தேசிய ஒருமைப்பாடே ஆகும்.
 
ஒற்றுமையின்மையால் தீவிரவாதம் 
தீவிரவாதம் தோன்றுவதற்குக் காரணம் ஒற்றுமையின்மையே ஆகும். ஒரே மதத்தில் ஒற்றுமையின்மையால் ஈராக்கில் இன்றும் பல உயிர்கள் இறக்கின்றன. இரு இனத்தவரிடையே ஒற்றுமையின்மையால் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் சண்டை நடைபெறுகிறது. இந்தியாவில் பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நடைபெறுவதற்கும் ஒற்றுமையின்மையே காரணமாகும்.  

பாரதிதாசன் கூறும் உலக ஒருமைப்பாடு
வீடும், நாடும், உலகமும்  நலம் பெற்றுவாழ ஒருமைப்பாட்டுணர்வு வேண்டும். இதனையே பாரதிதாசன்,
“உலகம் உண்ண உண்பாய்
       உலகம் உடுத்த உடுப்பாய்”  
என்று கூறுகிறார்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” 
என்ற புறநானூற்று அடியும் உலக ஒருமைப்பாட்டையே வலியுறுத்துகிறது.

முடிவுரை 
நாம் ஒவ்வொருவரும் தேசிய ஒருமைப்பாட்டையும் உலக ஒருமைப்பாட்டையும் கடைப்பிடித்து வாழ வேண்டும். அப்பொழுதுதான் 
“எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
   எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்ற பாரதியின் கனவு நனவாகும்.
ஒருமைப்பாட்டை வளர்ப்போம்!
உலக அரங்கில் உயர்வோம்!

சிக்கனமும் சிறுசேமிப்பும்

 

சிக்கனமும் சிறுசேமிப்பும்

 குறிப்புச் சட்டகம்
1. முன்னுரை
2. சிக்கனமும் சிறுசேமிப்பு
3. சேமிப்பு பற்றிய பழமொழிகள்
4. சேமிக்கும் வழிகள்
5. சேமிப்பின் பயன்கள்
6. வீடும் நலம் பெறும், நாடும் நலம் பெறும்
7. முடிவுரை

முன்னுரை:
‘ஈட்டுக பொருளை’ என்றார் வள்ளுவர். ஈட்டிய அத்தகைய பொருளை எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சிக்கனமும் சிறுசேமிப்பும்:
நம் வாழ்வில் ஈட்டும் பொருளைத் தேவைக்கேற்பச் செலவு செய்து வாழ வேண்டும். அளவுக்கு அதிகமாகச் செலவுசெய்தால், நீராவிபோல பணம் நம்மை விட்டு நீங்கிவிடும். சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் நீருற்றைப் போல பணம் பெருகிக் கொண்டு இருக்கும்.

சேமிப்பு பற்றிய பழமொழிகள்:
“சிறுகக் கட்டிப்பெருக வாழ்”
“பணம் பத்தும் செய்யும்”
“பணமில்லாதவன் பிணம்”
“சிறுதுளி பெருவெள்ளம்” போன்ற பழமொழிகள் சேமிப்பின் அவசியத்தை உணர்த்துகின்றன.

சேமிக்கும் வழிகள்:
மாணவர்கள்   சேமிக்கப்  பள்ளிகளில்  “சஞ்சாயிகாத் திட்டம்”
செயல்பட்டு வருகிறது. மேலும் அஞ்சலகம், வங்கி, ஆயுள் காப்பிட்டுக்கழகம் போன்ற நிறுவனங்கள் மக்கள் தங்கள் பணத்தைச் சேமிக்க உதவுகின்றன.

சேமிப்பின் பயன்கள்:
“இளமையில் சேகரி, முதுமையில் செலவிடு” என்பது முதுமொழி. இளமையில் கடுமையாக உழைத்து ஈட்டும் பொருளைச் செலவு செய்துவிடாமல், அப்பொருளின் ஒரு பகுதியைச் சேமிக்க வேண்டும். அப்போதுதான் முதுமைக் காலத்திலும், எதிர்பாராத செலவுகள் நேரும் காலத்திலும் சேமிப்பு நமக்கு உதவும். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதால் சேமிப்பானது இன்றியமையாத ஒன்றாகும்.

வீடும் நலம் பெறும்; நாடும் நலம் பெறும்:
“சேமிக்க வேண்டும் - காசு
 சேமிக்க வேண்டும்
 சிக்கனமாய்ச் செலவு செய்து
 காண்பிக்க வேண்டும்”
சேமிக்காதவன் கடன்பட்டு வேதனை அடைவான். தேனீ போலவும், எறும்புபோலவும் அயராது உழைத்துச் சேமித்தால் வீடும் நலம் பெறும், நாடும் நலம் பெறும்.

முடிவுரை:
சிறுகச்சேமித்துச் சிக்கனமாய் வாழ்ந்தால் பாறாங்கல் மீது வீழ்ந்த மழைநீர் போல, நமது துன்பங்களெல்லாம் சிதறிப்போகும். ஆகவே சிக்கனமாய்ச் செலவு செய்து, செழிப்போடு வாழ்வோம்.
சேமிப்போம்!
நாமும் முன்னேறுவோம்!!
நம் நாட்டை முன்னேற்றுவோம்!!!

மாணவரும் சமுதாயத்தொண்டும்

 மாணவரும் சமுதாயத்தொண்டும்


குறிப்புச்சட்டகம்

1.முன்னுரை
2.மாணவர் இயக்கங்கள்
3.தூய்மைப்பணி
4.நிலத்தைப் பேணுவதில் மாணவர் பங்கு
5.காற்று, நீரைக் காப்பதில் மாணவர் பங்கு
6.கற்பித்தலில் மாணவர் தொண்டு
7.சுகாதாரப்பணி
8.போக்குவரத்தில் மாணவர் தொண்டு
9.முடிவுரை

முன்னுரை
      மாண்பினைக் கற்றுக்கொண்டு அம்மாண்பினால் மற்றவர்களுக்கு உதவுபவர்களே மாணவர்கள் ஆவர். அம்மாணவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் தொண்டு பற்றிக் காண்போம்.

மாணவர் இயக்கங்கள்
      ஒன்றுபட்டு தொண்டு செய்ய மாணவர்கள் தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்களின் மூலம் சமுதாயத்திற்குத் தொண்டு செய்கின்றனர்.

தூய்மைப்பணி
      “சுத்தம் சோறு போடும்”; “சுத்தம் சுகம் தரும்” என்பன தூய்மையைக் கடைப்பிடிக்கத் தூண்டும் பழமொழிகளாகும். நிலம், நீர், காற்று ஆகிய மூன்றும் மாசுபடுவதைத் தடுப்பதற்கு மாணவர்கள் முன்வர வேண்டும்.

நிலத்தைப் பேணுவதில் மாணவர் பங்கு
      குப்பை கூளம், கழிவுப்பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், பாலிதின் பைகள், பயனற்ற மின் அணுப் பொருள்கள் முதலியவற்றால் நிலம் மாசுபடுகிறது, இவ்வாறு நிலம் மாசுபடுவதை மாணவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும். மேலும் அவற்றை மாணவர்கள் அப்புறப்படுத்தி மக்களுக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும்.

காற்று, நீரைக் காப்பதில் மாணவர் பங்கு
        புகையால் காற்று மாசுபடுவதையும் அமிலக் கழிவுகளால் நீர் மாசுபடுவதையும் மாணவர்கள் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வற்புறுத்த வேண்டும்.

கற்பித்தலில் மாணவர் தொண்டு
      கிராமந்தோறும் சென்று கல்வி அறிவில்லாத ஏழைக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் மாலை நேரத்தில் கற்பித்தல் வேண்டும். அறியாமை இருள் அகற்றும் ஆதவனாக மாணவர்கள் திகழ வேண்டும்.

சுகாதாரப்பணி
      தூய்மைக் குறைவால் காய்ச்சல், காலரா, சளி இருமல் போன்ற நோய்கள் ஏற்படுவதை மக்களுக்கு மாணவர்கள் எடுத்துக் கூற வேண்டும். சுற்றுப்புறச் சூழலைப் பேணுவதில் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

போக்குவரத்தில் மாணவர் தொண்டு
       அரசின் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க மாணவர்கள் காவலர்களுடன் மக்களுக்கு உதவ வேண்டும். திருவிழா, பொதுக்கூட்டம் போன்றவற்றில் மக்களை ஒழுங்குபடுத்த காவலர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும்.

முடிவுரை
       மாணவரால் முடியாதது எதுவுமில்லை. இந்தச் சமுதாயம் சீர்பெற மாணவர்கள் அனைத்துத்துறைகளிலும் பங்குபெற வேண்டும். ஒன்றுபட்ட வளமான இந்தியாவை உருவாக்க மாணவர்களின் தொண்டு மிகமிக இன்றியமையாததாகும்.